Sarva Praharanayuthan

One who uses everything as his weapon!

தீராத வியாதிகள் தீர – ஸ்ரீமத் ராமாயண, யுத்த காண்டத்தின் 59வது சர்க்கம்

ஸ்ரீமத் ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் உள்ள 59 வது சர்க்கம் ராவண கிரீட பங்கம் ஆகும். இதை தினமும் காலை மாலை என இருவேளையும் படித்த வர தீராத வியாதிகள் அனைத்தும் தீரும்.

ராவணனின் ஆச்சரியமும் போருக்குப் புறப்படுதலும்

அக்னியின் புத்திரரான வானரத் தலைவன் நீலனால் பிரஹஸ்தன் கொல்லப்பட்டவுடன், பெரும் ஆயுதங்களையும் வேகத்தினையும் உடைய ராக்ஷச சேனை நிலைகுலைந்து போனது. அவர்கள் விரைவாகச் சென்று ராவணனிடம் பிரஹஸ்தன் மடிந்ததைத் தெரிவித்தார்கள். பிரஹஸ்தன் மடிந்ததைக் கேள்வியுற்ற ராவணன் பெரும் ஆச்சரியமும் கோபமும் கொண்டான். தன்முன்னே நிற்கும் ராக்ஷச வீரர்களைப் பார்த்து, “நம் சேனாதிபதியானவன் அத்தனைச் சாமான்யமானவனா? இந்திரனையே கலங்கச் செய்பவனான அவனும், நம் சேனையும் குரங்குகளால் மடிந்தார்கள். எனவே எதிரிகளை நாம் அலட்சியமாக எண்ணக் கூடாது. ஆகையால் இனி நானே போருக்குச் சென்று ராம லக்ஷ்மணர்களையும் வானரர்களையும் காட்டுத் தீயானது மரங்களைச் சுட்டெரிப்பது போல வெற்றி கொள்கிறேன்”, எனக் கூறி பிரகாசமான தன் ரதத்தில் ஏறினான்.

அவனுடைய ரதத்தில் நல்ல உயர் ரகக் குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன, அவைகளின் ஒளியால் எட்டுத் திக்கும் பிரகாசித்தன. அந்தச் சமயத்தில் சங்கு, பேரிகை போன்ற வாத்தியங்களின் ஒலியும், வீரர்கள் தோள் தட்டும் ஒலியும், சிம்ம நாதமும், மங்கள ஸ்தோத்திரங்களின் ஒலியும், பெரியோர்களின் ஆசீர்வாதமும் அவ்விடத்தை நிறைத்தது. மக்களின் கொண்டாட்டத்தோடு ராவணன் போருக்குப் புறப்பட்டான்.

மலைகளைப் போன்ற இறுகிய தேகங்களையும், மேகங்களைப் போல நினைத்த நேரத்தில் தன் உருவங்களை மாயையால் மாற்றக் கூடிய  ராக்ஷசர்களையும் தன் சேனையில் கொண்ட ராவணன், பூதகணங்களால் சூழப்பெற்ற ருத்ரனைப் போல விளங்கினான்.

ராவணன் இலங்கையை விட்டு வெளியே வந்து, பயங்கரமாக கர்ஜித்துக் கொண்டிருந்த வானர சேனையைக் கண்டான். அவர்கள் மரங்களையும், மலைகளையும் பெயர்த்து எடுத்துக் கொண்டு சமுத்திரத்தைப் போலத் தோன்றினர்.

விபீஷணன் ராவணனின் படை விபரம் உரைத்தல்

அசுரப் படையைக் கண்ட ஸ்ரீராமபிரான் வீரத்தால் தோள்கள் நீண்டு விளங்கினார். ராக்ஷசப் போர்வீரர்களின் நிறை குறைகளை நன்கு அறிந்த விபீஷணனிடம் ஸ்ரீராமர், “கொடிகள், ஈட்டிகள், விற்கள், சூலங்கள் போன்ற ஆயுதங்களையும், மற்றும் மலைகளைப் போன்ற யானைகளையும் உடைய, பயம் அறியாத இவ்வீரர்களைக் கொண்ட படை யாருடையது?”, என வினவினார்.

இவ்வாறு ஸ்ரீராமனால் கேட்கப்பட்ட வீரமுடைய விபீஷணன், ராக்ஷச சேனையின் பெருமைகளை விவரித்தான்.

  1. பெரும் உடலையும், இளஞ்சூரியனைப் போன்ற செம்மையான முகத்துடனும், யானையின் தலையில் உட்கார்ந்து கொண்டு தன் பலத்தால் யானையையே அதிரச் செய்பவன் அகம்பனன் ஆவான்.
  2. இந்திரனின் வில்லைப் போன்ற தன்னுடைய வில்லினைச் சுழற்றி கொண்டு சிம்ஹக் கொடியுடைய தேரில் இருப்பவன், ராவணனின் மூத்த மகனான இந்திரஜித். இவனுக்கு பிரம்மா அளித்த வரத்தால் நினைத்த பொழுதினில் மறையக் கூடிய ஆற்றல் உண்டு. கோரைப் பற்களும், யானையைப் போன்ற பலமும் உடையவன்.
  3. விந்திய மலை, மஹேந்திர மலை போன்ற தேகத்தை உடையவன் அதிகாயன். இவனுக்கு மாய சக்திகள் கிடையாதென்றாலும், ஆயிரம் குதிரைகள் இழுக்கும் தேரில் வரும் இவன் இந்திரஜித்தை விட மேலானவன்.
  4. இளஞ்சூரியனைப் போன்ற நேத்திரங்களுடன் சிறந்த யானையின் மீதேறி கர்ஜித்துக் கொண்டு வருபவன் மஹோதரன்.
  5. தங்கம் மற்றும் சேனத்தினால் அலங்கரிக்கப்பட்ட அஸ்வத்தின் மீதேறி ஈட்டியினோடு வருபவன் பிசாசன்.
  6. மின்னல் போன்ற ஒளியோடும், வஜ்ராயுதத்தைப் போன்ற வேகத்தோடும் சூலத்தினை ஏந்தி மலையைப் போன்ற காளையில் வருகிறவன் திரிசரஸ்.
  7. மேகத்தைப் போன்ற உருவத்துடனும், அகலமான மார்புடனும் நாகக் கொடியோடு வில்லைச் சுழற்றுபவன், கும்பன்.
  8. தங்கம் மற்றும் வஜ்ரங்களால் அலங்கரிக்கப்பட்டு, புகையோடு பிரகாசிக்கும் இரும்புத்தடியைக் கொண்டு வருபவன், சேனையில் முக்கியமானவனான நிகும்பன்.
  9. வில், கத்தி மற்றும் பாணங்கள் கொண்டு, அழகான கொடியுடன் நெருப்பினைப் போன்று பிரகாசிக்கும் தேரில் வருபவன் நராந்தகன். இவனோடு சண்டையிட யாரும் இல்லாதபடியால் தன் தோளின் தினவு தீர்வதற்காக மலைகளோடு சண்டையிட்டுக் கொண்டிருப்பவன்.

“கோர உருவங்களோடும், புலி, ஒட்டகம், பாம்பு, மான், குதிரை போன்ற மிருகங்களைப் போன்ற முகங்களோடும், சுழலும் கண்களைக் கொண்டும், பூதங்களால் சூழப்பட்டு வருகிறவன் தேவர்கள் கர்வத்தினை அடக்கினவன். அவனது தலைமேல் வெள்ளைக் குடை சந்திரனைப் போன விளங்குகிறது. ருத்திரனைப் போல வீற்றிருப்பவன் அசுராதிபதி. இந்திரன், யமன் போன்றவர்களை அடக்கிய லங்கேஸ்வரன் (ராவணன்), சூரியனைப் போன ஜொலிப்பதைப் பாருங்கள்”, எனக் கூறினான் விபீஷணன்.

ஸ்ரீராமர் போருக்குத் தயாராகுதல்

விபீஷணனால் இப்படிக் கூறக் கேட்ட ஸ்ரீராமர், “விபீஷணா! என்ன ஒளி! அசுரர்களின் அதிபதியான ராவணன் மஹா மாட்சிமை பொருந்தியவன் என்று தோன்றுகிறது. சூரியனைப் போல ஜொலிக்கும் ராவணனைப் பார்க்கக் கண்கள் கூசுகின்றன. தேவர்களுக்குக் கூட இப்படி ஒளி கிடையாது. ராவணனின் படையில் ஒவ்வொருவரும் பருத்த உடலை உடையவர்கள். பராக்கிரமர்களான வீரர்களை உடைய இந்தப் பாவியினை இன்று நான் கண்ணுற்றது நன்மைக்கே. சீதையை இவன் அபகரித்ததால் ஏற்பட்டக் கோபத்தை இதுவரை அடக்கினேன். அக்கோபத்தை இப்போது ராவணன் மேல் பிரயோகிக்கிறேன்”, எனக் கூறி தன் கோதண்டத்தை எடுத்து டங்காரம் செய்தார். இளவலான லக்ஷ்மணனோடு இருந்த அவர், உத்தமமான ஒரு பாணத்தைத் தன் வில்லினில் நாணேற்றினார்.

ராவணன் தன்னைச் சுற்றியிருந்த சேனை வீரர்களிடம், “கவலையேதுமின்றி நீங்கள் இலங்கையின் உட்கோட்டை வாயில்களையும், வீடுகளையும், ஜாக்கிரதையாகக் காத்துக் கொண்டிருங்கள். நான் இங்கே போர் புரிய வந்திருப்பது தெரிந்தால், எதிரிகள் அங்கே நுழைந்து எளிதில் அவைகளைக் கைப்பற்றி விடுவர்”, எனக் கூறிவிட்டு ஒரு திமிங்கலத்தைப் போல வானர சேனையை விலக்கிச் சென்றான்.

ஜொலிக்கும் வில்லையும் பாணங்களையும் கொண்டு வானர சேனையை நோக்கி யமனைப் போன்று வந்த ராவணனின் மேல் சுக்ரீவன் ஒரு மலைச் சிகரத்தைப் பெயர்த்து எறிந்தான். ராவணன் அந்தச் சிகரத்தைத் தன்னுடைய பாணம் கொண்டு தூள் தூளக்கினான். பின்னர் ஒரு பாணத்தை சுக்ரீவன் மேல் எய்தினான். முருகப்பெருமான் கிரௌஞ்ச மலையின் மேல் எய்த வேலைப் போல அந்தப் பாணம் சுக்ரீவனைப் பிளந்து கொண்டு சென்றது. அந்தப் பாணத்தால் ஏற்பட்ட வலியினால் மதிமயங்கி அலறிக்கொண்டு மண்ணில் விழுந்தான் சுக்ரீவன். இவ்வாறு சுக்ரீவன் விழுவதைக் கண்ட ராக்ஷசர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தனர்.

உடனே கவாக்ஷன், கவயன், சுசேனன், ரிஷபன், ஜ்யோதிர்முகன், நளன் ஆகிய வீரர்கள் மலைகளைப் பெயர்த்துக் கொண்டு ராவணனை நோக்கி ஓடினார்கள். ராவணன் பாணங்களால் இவர்களின் முயற்சியை வீணாக்கி மீண்டும் வேறு சில பாணங்களால் அவர்களை அடித்தான். பாணங்களால் அடிக்கப்பட்ட அவர்கள் கைகால்களை உதறிக் கொண்டு பூமியில் விழுந்தனர். வானர சேனையைத் தன் அம்பு மழையால் மறைத்தான் ராவணன். வானர சேனையில் பலர் பாணங்களினால் அடிக்கப்பட்ட வலியாலும், பயத்தினாலும் கதறினர். சேனையினர் அனைவரும் ஸ்ரீராமரைச் சரணடைந்தார்கள்.

வாயுபுத்திரன் ராவணனை எதிர்கொள்ளல்

வீரர்களால் சரணடையப்பட்ட ஸ்ரீராமர் உடனடியாகத் தன் வில்லினை எடுத்துக் கொண்டு ராவணனை எதிர்க்கச் சென்றார். அப்போது இளையபெருமாளான லக்ஷ்மணர் ராமனிடம், “தாங்கள் அனுமதி அளித்தால் நானே இவனை வதம் செய்கிறேன்”, எனக் கேட்டார்.

ஸ்ரீராமர் லக்ஷ்மணனிடம், “செல்! வெகு ஜாக்கிரதையாகப் போர் புரிவாய். எதிரியை அலட்சியம் செய்யாதே. உன் வில் மற்றும் கண்களால் உன்னை ஜாக்கிரதையாகக் காத்துக் கொள்வாய்”, எனக் கூறினார். லக்ஷ்மணன் ஸ்ரீராமரிடம் அனுமதி பெற்றபின் வில்லேந்தி முன்னேறிச் சென்றார். அங்கு ராவணன் வில்லினை வளைத்து வானரப் படையைத் தன் அம்புகளால் துவம்சம் செய்வதைக் கண்டார்.

இதற்குள்ளாக வாயுபுத்திரரான அனுமன் ஓடிவந்து ராவணனின் பாணங்களைத் தடுத்து ராவணனின் மேல் பாய்ந்தார். தன்னுடைய வலக்கையினை உயர்த்தி, “நீ பெற்ற வரத்தின் பொருட்டு, தேவர்கள், தானவர்கள் கந்தர்வர்கள் மற்றும் யக்ஷர்களை நீயும் உன் படையும் வெற்றி கொண்டீர்கள். ஆனால் வானரர்கள் உனக்கு யமன் என்பதை எப்படி அறியாமல் போனாய்? இதுவரை நீ பிழைத்திருக்க விட்டதே தவறு. இதோ, ஐந்து கிளைகளை உடைய மரத்தினைப் போன்ற எனது வலது கை, உனது உயிரைக் குடிக்கப் போகிறது”, எனக் கூறினார்.

அனுமனின் கர்ஜனையைக் கேட்ட ராவணன், கோபத்தால் சினந்து, “ஹே குரங்கே, தயங்காதே, சீக்கிரமாய் என்னை அடி. என்னை எதிர்த்துக் கீர்த்தியைப் பெற விரும்புகிறாய் போலும். ஆகையால் உன்னைத் தடுக்கவில்லை, உன் பலத்தினை அறிந்த பிறகு உன்னை அழிக்கிறேன்”, என்றான்.

“ஹே துஷ்டா, நீ என்னைக் கொல்ல நினைப்பது இருக்கட்டும், உன் மகனான அக்ஷனைக் கொன்றது நானே. அது பொய் இல்லையே!”, என அனுமன் கூறினார். இதைக்கேட்ட ராவணன் அனுமனின் மார்பில் ஓங்கி அடித்தான். இதனால் நடுங்கிய அஞ்சனையின் மைந்தன் ஒரு முகூர்த்தக் காலம் அசைவற்று நின்றார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அனுமன், பெருங்கோபத்தோடு ராவணனைக் கையால் அறைந்தார். இதனால் பத்துத் தலைகளைக் கொண்ட ராவணன், பூகம்பத்தினால் மலைகள் நடுங்குவதைப் போல நடுங்கிப் போனான். இதனைக் கண்ட ரிஷிகள், வானவர்கள், வானரர்கள் மகிழ்ச்சியால் கோஷம் எழுப்பினர்.

அதற்குப் பின் சற்று நிலைபெற்ற ராவணன் அனுமனிடம், “ஹே குரங்கே! உன் வீரத்தைக் கண்டு மெச்சினேன். நீ எனக்குத் தகுந்த எதிரியே!”, என்றான். அதற்கு அனுமன், “என்னால் அடிக்கப்பட்டும் இன்னும் பிழைத்திருக்கிறாயே! அப்படி இருக்கையில் என் வீரத்தைப் புகழ்வானேன். இன்னும் ஒருமுறை என்னை அடி. வீண்பெருமை பேசாதே! அதன்பின் என் முஷ்டியால் உன்னை யமலோகம் அனுப்புகிறேன். இனி பிழைக்கமாட்டாய்”, என்றார்.

இதனைக் கேட்ட ராவணனுக்குக் கோபம் கொப்பளித்தது. கண்கள் சிவக்க தன் வலக்கையை மடக்கிக்கொண்டு தன் முழுபலத்தால் அனுமனின் மார்பில் அடித்தான். இதனால் அனுமன் மீண்டும் நடுங்கினார்.

நீலனின் வீரம்

அனுமன் இவ்வாறு கலங்கி நிற்பதைக் கண்ட ராவணன், தன் தேரினை நீலனை நோக்கிச் செலுத்தினான். சர்ப்பங்களைப் போன்ற பாணங்களால் நீலனை அடித்தான் ராவணன். நீலன் ஒரு கையால் பாணங்களைத் தடுத்து, மறுகையால் ஒரு மலையைப் பிடுங்கி ராவணன் மேல் எறிந்தான்.

இதற்குள்ளாக சிரமம் தீர்ந்த அனுமன், மீண்டும் யுத்தம் செய்ய விரும்பினார். எனினும் ராவணன் நீலனுடன் போர் புரிந்துகொண்டிருப்பதைக் கண்ட அனுமன், ராவணனுடன் தானும் அதே நேரத்தில் போரில் ஈடுபடுவது தகாது எனக் கருதி அவ்விடம் நீங்கினார்.

ராவணன் நீலன் எறிந்த பாறையை ஏழு பாணங்கள் கொண்டு தூள்தூளாக்கினான். நீலன் ராவணனைப் பலவித மரங்களை வேருடன் பிடுங்கி அடித்தான். அவற்றை பாணங்களால் அடித்த ராவணன், பலவித பாணங்களால் நீலனைத் தாக்கினான். பாணங்களால் அடிக்கப்பட்டு அசைவற்று நின்ற நீலன், தன் உருவத்தைச் சுருக்கி ராவணனுடைய த்வஜத்தின் நுனியில் குதித்தான். த்வஜத்தின் நுனியிலும், கிரீடத்தின் நுனியிலும், அம்பின் நுனியிலும் நீலன் மாறி மாறி குதித்தான், இதைக் கண்டு ராவணன் கோபத்தில் ஜொலித்தான்.

நீலன் சர்வசாதாரணமாய் இப்படிச் சஞ்சரிப்பதைக் கண்ட ஸ்ரீராமர், லக்ஷ்மணர், அனுமன் ஆகியோர் ஆச்சரியம் அடைந்தார்கள், வானரர்கள் ஆனந்தக் கூச்சலிட்டார்கள். நீலனின் சாமர்த்தியத்தை மெச்சிய ராவணன், அக்னி அஸ்திரம் ஒன்றினை நீலனின் மேல் ஏவினான். அக்னி அஸ்திரத்தால் மார்பில் அடிக்கப்பட்ட நீலன், உடல் எங்கும் எரிக்கப்பட்டு பூமியில் சாய்ந்தான். மஹா தேஜஸ்வியான நீலன், தன்னுடைய பிதாவான அக்னி பகவானுடைய அனுக்கிரஹத்தால் மரணமடையாமல் பூமியில் காலை ஊன்றி கொண்டு விழுந்தான். நீலன் மயங்கிக் கிடப்பதைக் கண்ட ராவணன், மேகங்களைப் போல கர்ஜிக்கும் தன் ரதத்தை லக்ஷ்மணரை நோக்கிச் செலுத்தினான்.

லக்ஷ்மணர் ராவண யுத்தம்

சுக்ரீவன் முதலான வானர சேனையை விலக்கி, சைன்யத்தின் நடுவே நின்று தன் வில்லினை வளைத்து பூமியே நடுங்கும்படி டங்காரம் செய்தான் ராவணன். இதைக் கண்ட இளையபெருமாளான லக்ஷ்மணர், “ராக்ஷசர்களின் ராஜனே! இவர்கள் உன்னோடு யுத்தம் செய்யத் தகாதவர்கள். எனவே வேறு எங்கும் செல்லாமல், என்னுடன் யுத்தம் செய்ய வா”, எனக் கூறி சிம்ஹ நாதமும், நாணோசையும் எழுப்பினார்.

இதைக் கண்டும் கேட்டும் கோபத்தின் உச்சிக்குச் சென்ற ராவணன், “புத்தி மயங்கியும், மரணத்தை விரும்பியும் இன்று என்னுடைய கண்ணில் பட்டாய். இது நல்லது. என்னுடைய பாணங்களால் உன்னை இன்று யமலோகத்திற்கு அனுப்புகிறேன் பார்!”, என்றான்.

ராவணனைக் கண்டு கொஞ்சமும் கலங்காத லக்ஷ்மணர், “ராக்ஷச ராஜனே! உயர்ந்தவர்கள் என்றும் தங்களைப் புகழ மாட்டார்கள். நீ மஹா பாவியானதனால் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறாய். உன்னுடைய வீரத்தையும், பலத்தையும் நான் அறிய மாட்டேனோ? யாருமற்ற சமயத்தில் சந்யாசி வேடம் பூண்டு சீதையை அபகரித்த மஹா வீரனல்லவா நீ! இதோ என் வில்லோடு நான் வந்திருக்கிறேன். நீ என்ன செய்யப் போகிறாய் என்பதனைப் பார்க்கலாம், வீணாகப் பிதற்றாதே”, என்றார்.

ஏழு கூரான பாணங்களை லக்ஷ்மணர் மேல் ராவணன் ஏவ, அவற்றை துண்டித்தார் இளைய பெருமாள். கூர்மையான வேறு பாணங்களை ராவணன் விடுக்க அவற்றையும் துண்டித்தார் லக்ஷ்மணர். உக்ரமாகச் சரமாரி பொழிந்தார் லக்ஷ்மணர். அர்த்தசந்திரம், பல்லம், கற்னி போன்ற பாணங்களால் ராவணனுடைய பாணங்களை அறுத்தெரிந்தார் லக்ஷ்மணர். வஜ்ராயுதம் போன்ற வேகமுடைய பாணங்களையும், நெருப்பைப் போல பிரகாசமுடைய பாணங்களையும் ராவணன் மேல் லக்ஷ்மணர் ஏவ, ராவணன் அவற்றை துண்டித்தான்.

பிரம்மதேவர் தனக்களித்த பெரும்நெருப்பினைப் போன்ற ஒளியுடைய பாணத்தை ராவணன் லக்ஷ்மணர் மேல் ஏவினான். அந்தப் பாணம் லக்ஷ்மணரின் நெற்றியில் அடித்தது. அவர் தன்னுடைய வில்லை நழுவவிட்டு நடுங்கினார். பிறகு மயக்கம் தெளிந்து ராவணுடைய வில்லை உடைத்து மூன்று பாணங்களால் அவனை அடித்தார். ராவணன் அந்த வேகத்தால் வருந்தி நடுங்கிப் போனான். அவன் உடலெங்கும் ரத்தமும், கொழுப்பும் பெருகியது.

முன்பு தனக்கு பிரம்மா அளித்த சக்தி என்ற ஆயுதத்தை எடுத்தான் ராவணன். வானர சேனை அதைக் கண்டு அஞ்சிற்று. புகை இல்லாத நெருப்பினைப் போல ஜொலிக்கும் அவ்வாயுதத்தை லக்ஷ்மணர் மேல் பிரயோகித்தான் ராவணன். தன் விசேஷமான அநேக பாணங்களால் ராவணன் விடுத்த பாணத்தினை அடித்தார் லக்ஷ்மணர், எனினும் அது அவருடைய மார்பினை ஊடுருவிச் சென்றது. அதனால் நெருப்பு ஜ்வாலைகளால் சூழப்பட்டு பிரக்ஞையற்று விழுந்தார்.

அனுமனின் பக்திக்கு லக்ஷ்மணர் கட்டுப்படல்

ராவணன் தன்னுடைய இருபது கைகளாலும் லக்ஷ்மணரைத் தூக்கி எடுக்கப் பார்த்தான். ராவணன் கைலாச பர்வதத்தைப் பெயர்த்து எடுத்தவன். மந்த்ர பர்வதத்தைக் கடைந்த தேவர்கள் மற்றும் அசுரர்களையும் வென்றவன். மேரு பர்வதத்தின் சிகரத்தை அடித்து லங்கையைச் சூழ்ந்திருந்த சமுத்திரத்தில் தள்ளியவர் வாயு பகவான், அந்த வாயு பகவானும் ராவணனுக்குப் பயந்திருக்கிறார். தேவர்களுக்கு அதிபதியான இந்திரனை, ராவணனின் புத்திரனே வென்று சிறைப்படுத்தினான். ஆனால் ஸ்ரீராமரின் தம்பியான பரதனுக்குத் தம்பியான லக்ஷ்மணரை ராவணனால் அசைக்கக் கூட முடியவில்லை. ராவணனும், அவனுடைய சேனையும் ஒன்று சேர்ந்தும் முடியவில்லை.

பிரம்மாவினுடைய சக்தியால் மார்பில் அடிக்கப்பட்ட லக்ஷ்மணர் தான் தன் மனதிற்கு எட்டாத விஷ்ணுவன் அம்சமான ஸ்வரூபம் என்பதை நினைவுபடுத்திக் கொண்டார். ராவணன் நெடுநேரம் முயன்றும் அவனால் லக்ஷ்மணரை அசைக்க முடியவில்லை. லக்ஷ்மணர் மனித தேகத்தில் உள்ள விஷ்ணு பகவானின் அம்சம் ஆவார்.

அதன் பின்னர் ஆஞ்சநேயர் ராவணனின் மேல் பாய்ந்தார். வஜரம் போன்ற தன் முஷ்டியால் ராவணனின் மார்பில் ஓங்கிக் குத்தினார். ராவணன் தேரின் தட்டில் தன் முழங்காலை ஊன்றிக் கொண்டு நடுநடுங்கி விழுந்தான். அவனுடைய வாய், கண்கள், காதுகளில் ரத்தம் பெருகியது. சிறிது நேரம் பிரமை பிடித்தவன் போல அசைவற்று இருந்தான். அதன் பின்னர் மூர்ச்சை அடைந்தான். பின்னர் எழுந்தும் அவனால் ஸ்திரமாக நிற்க முடியவில்லை. ராவணன் பிரக்ஞையற்று விழுந்ததைக் கண்ட ரிஷிகளும், வானவர்களும், தேவர்களும், இந்திரனும் ஆனந்தக் கூச்சலிட்டனர்.

ராவணனால் அடிக்கப்பட்ட லக்ஷ்மணரை, அனுமன் தன் புஜங்களால் தூக்கி ஸ்ரீராமரிடத்தில் கொண்டு இறக்கினார். ராவணனுக்கும் அவனுடைய முழு சேனைக்கும் அசையாத இளவல், அனுமனின் பக்திக்கு வசப்பட்டு எடையில் மிகுதியாகக் குறைந்தார். ஸ்ரீராமரும் லக்ஷ்மணரும் அஞ்ஞானம் மற்றும் சக்தி குறைவற்று வருந்துகிறவர்கள் போலக் காணப்பட்டாலும், அவை உண்மைத்தன்மை அல்ல. அவர்கள் மனிதர்களின் பாவனைகளை அனுசரித்துச் செயல்படுகிறபடியாலேயே எனக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீராமர் ராவணனைப் போருக்கு அழைத்தல்

சக்தி ஆயுதமானது லக்ஷ்மணரை விட்டு நீங்கி ராவணனின் தேரில் தன் இடத்திற்குப் போய் சேர்ந்தது. தன் ஸ்வரூபத்தை நினைவுபடுத்திக் கொண்ட லக்ஷ்மணர், பிரக்ஞையும் காயமும் நீங்கி முன் போல ஆனார்.

இதற்குள்ளாக மூர்ச்சை தெளிந்த ராவணன், தன் பாணங்கள் மூலம் வானர சேனையை அடித்தான். வானரர்கள் மடிவதையும், அவர்கள் சிதறி ஓடுவதையும் கண்ட ஸ்ரீராமர் ராவணனை நோக்கி வந்தார். அப்போது அவரை வணங்கிய அனுமன், “ஸ்வாமி, என் முதுகில் ஏறிக் கொண்டு, ஸ்ரீவிஷ்ணு கருடன் மேலேறி அசுரர்களை ஸம்ஹாரம் செய்ததைப் போல யுத்தம் செய்யுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார். ஸ்ரீராமரும் அப்படியே அனுமனின் தோளில் ஏறிக்கொண்டார்.

தன் தேரில் இறுமாப்போடு அமர்ந்திருக்கும் ராவணனைக் கண்ட ஸ்ரீராமர், முற்காலத்தில் பலியை சம்ஹரிக்க வந்தது போலத் தன் கோதண்டத்தை வளைத்து பெரும் நாணோசை எழுப்பினார். “ஹே ராக்ஷச வீரனே! நில்! எங்கும் ஓடாதே. என் பிரியத்திற்குரிய மனைவியான சீதையை அபகரித்து என் கோபத்திற்கு ஆளான பின் எப்படித் தப்பிப்பாய்? இந்திரன், யமன், சூரியன், பிரம்மா, அக்னி, சிவன் முதலானோர்களை அண்டினாலும், எந்தத் திக்கினில் ஓடி ஒளிந்தாலும், என் கண்ணில் நீ பட்ட பிறகு உன் உயிர் தப்புமா? உனக்கும், உன் சேனைக்கும் காலனைப் போன்ற என்னுடைய இளவல் இதோ வந்துவிட்டான். நீ அவனை சக்தியால் அடிக்கப் பார்த்தாயோ? அவன் தன் பாணங்களால் ஜனஸ்தானத்தில் வசித்த பதினான்காயிரம் ராக்ஷச வீரர்களையும், கரன், தூஷணன், த்ரிசரஸ் முதலியவர்களையும் ஒரு முகூர்த்தக் காலத்தில் சம்ஹாரம் செய்ததையும் அறியமாட்டாயோ?”, எனக் கேட்டார்.

ராவண கிரீட பங்கம்

இதைக் கேட்ட ராவணன், நெருப்புக் கொழுந்துகளைப் போலக் கூர்மையான பாணங்களால் வாயு புத்திரன் ஆஞ்சநேயரை அடித்தான். அவருடைய தேஜஸ் அதிகமாகியது. தன்னையும் அடித்து விட்டு, ஸ்ரீராமரையும் தூக்கி வருகிறார் அனுமன் என்ற கோபம் ராவணுனுக்கு அதிகமாகியது. ராவணனால் அனுமனின் தேகம் காயப்படுவதைக் கண்ட ஸ்ரீராமருக்குக் கோபம் அதிகமாகியது. ராவணனுடைய ரதம், சக்கரங்கள், கொடி, சாரதி, குடை மற்றும் ஆயுதங்களைத் தன் பாணங்களால் நாசம் செய்தார் ஸ்ரீராமர். வஜ்ரம் போன்ற ஒரு பாணத்தால் ராவணனின் மார்பில் அடித்தார் ஸ்ரீராமர். வஜ்ராயுதத்தாலும் இடியாலும் கலங்காத ராவணன், ஸ்ரீராமரின் பாணத்தால் அடிபட்டு வருந்தி, நடுக்கமுற்று தன் வில்லினை நழுவ விட்டான். ஸ்ரீராமர் ஒரு அர்த்த சந்திர பாணத்தைப் பிரயோகித்து, சூரியனைப் போல பிரகாசிக்கும் ராவணனின் கிரீடத்தை அறுத்தெரிந்தார்.

விஷமற்ற பாம்பினைப் போலவும், அணைந்த நெருப்பினைப் போலவும் தன் வில்லினை விட்டெறிந்து, அணைந்து போன கிரணங்களுடைய சூரியனைப் போல பிரகாசம் இல்லாது, லக்ஷ்மிக் களையில்லாத தீனனாய் கீரீடமறுபட்டு நிற்கும் ராவணனைப் பார்த்து ஸ்ரீராமர், “ஹே ராவணா! நீ இன்று பிறரால் செயற்கரிய செயலைச் செய்திருக்கிறாய். வானர சிரேஷ்டர்கள் பலர், மற்றும் என் தம்பியை அடித்திருக்கிறாய். ஆகையால் களைப்பில் ஆயுதங்கள் ஏந்தி போர் புரிய இயலாதிருக்கிறாய். நெடு நேரம் யுத்தம் செய்து களைத்தவனைக் கொன்றேன் என்ற பழி ஏற்பட இடமளிக்காமல் இப்பொழுது உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். யுத்தம் செய்யக் களைத்திருக்கிற நீ, லங்கை சென்று களைப்பாறி, வேறு ரதமும் ஆயுதமும் கொண்டு நாளை வா”, என்றார்.

இதைக் கேட்டு தளர்ந்த, மகிழ்ச்சி சிறிதும் இல்லாத ராவணன் வில்லொடிந்து, குதிரைகளும் சாரதியும் மடிந்து, கிரீடம் உடைக்கப்பட்டு, பாணங்களால் அடிக்கப்பட்ட நிலையில் வெகு வேகமாய் லங்கைக்குச் சென்றான்.

ராவணன் போன பிறகு தேவர்களும் தானவர்களும் ஆனந்தக் கூத்தாடினர். ராவணன் இவ்வாறு ஓடுவதைக் கண்ட பூதங்கள், திக்பாலர்கள், ரிஷிகள், மற்றும் பூமியில் வசிப்பவர்கள் அனைவரும் கவலை நீங்கி “மஹா பாவியான ராவணன் ஸ்ரீராமரால் தோல்வி அடைந்தான். இனி அவனுக்கு மரணமும், அனைவரது கஷ்டங்களும் தீரும் காலமும் நெருங்கியது”, என்று சந்தோஷித்தார்கள்.

ஸ்ரீமத் ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் உள்ள 59வது சர்க்கம் நிறைவு பெற்றது.

தீராத வியாதிகள் தீர – ஸ்ரீமத் ராமாயண, யுத்த காண்டத்தின் 59வது சர்க்கம்
Scroll to top